Wednesday, December 12, 2007

கலைஞரே இது நாயமா?

இன்னாப்பா இது அநியாயமா கீது.
இலவசமா டிவி பொட்டி தர்ரேன்னு சொன்னதாலதான
ஓட்டுப்போட்டோம்.இப்போ டிவிய வித்தா குண்டாஸ்ல
போட்டுருவோம்னா இன்னாபா நாயம்.
சென்னைல டிவிபொட்டி இல்லாத குடிசை
ஏதாவது கீதாபா. குந்த எடம் கீதோ இல்லையோ
அங்க டிவிபொட்டிகீது. குடிக்க கஞ்சி கீதோ இல்லையோ
கந்துவட்டிக்கு கடன்வாங்கியாவது கலர்டிவி வாங்கி
வச்சுக்கறோம்.(இதுக்கு மேல ராயபுரம் 'கடுக்கா' ராசுவோட
சென்னை தமிழ் எனக்கு வரலைங்க) இதுக்கு மேல
இலவச கலர்டிவிய வாங்கி நாங்க எங்க வச்சுக்கறது.
அதை அடிதடி போட்டு வாங்கறது
இன்னாத்துக்கு. சேட்டு கடைல வைக்கறதுக்கோ
இல்லாங்காட்டி விக்கறதுக்கோதான். இப்போ இந்த
டிவி பொட்டிய பாத்தா ஆசைவரல ஆத்திரம்தான்
வருது. ஆத்திர அவசரத்துக்கு அடமானம் வைக்கக்கூட
முடியாத பொருளை எதுக்கு அடைகாத்து வச்சிருக்கனும்னு
தோணுது.ஒரு நேரம் பத்தா ஏதோ கடத்தல் பொருளை
குடிசைக்குள்ள பதுக்கி வச்சிருக்க மாதிரி பயமாக்கூட இருக்குப்பா.
அதைப்பாத்தாலே குண்டாஸ் ஆக்ட்டும் புழல் ஜெயிலும்தான்
ஞாபகத்துக்கு வருதுப்பா.
கலைஞரய்யா இது நாயமா?

Friday, December 07, 2007

கருணாநிதியும் கருப்புக் கண்ணாடியும்.

தமிழ்நாட்டில் கார்களுக்கு கருப்புக்கண்ணாடி போட (colour film ஒட்ட) தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாகனங்களுக்குள் நடைபெறும் சமூகவிரோத செயல்கள் தடுக்கப்படுமாம்.
இது VIP கார்களுக்குப் பொருந்துமா என்று தெரியவில்லை?
கருணாநிதி கருப்புக்கண்ணாடி அணிந்திருப்பதால்தான் நாட்டில் நடக்கும்
சமூகவிரோத செயல்கள் அவருக்கு தெரிவதில்லையோ?
அப்ப அவரும் கண்ணாடிய கழட்டிருவாரா?

Tuesday, December 04, 2007

சென்னையில் மாணவ ரெளடிகள்!

சம்பவம்: 1
சென்னை அரும்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் +1, +2 மாணவர்களுக்கு இடையே
நடந்த கிரிக்கெட் போட்டியில் மோதல் ஏற்பட்டு அடிதடி நடந்துள்ளது. மோதலில் ஈடுபட்ட
மாணவர்கள் பெற்றோரை அழைத்து வரவேண்டும் என்று பள்ளி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே மீண்டும் மாணவர்களிடையே அடிதடி நடந்துள்ளது.
தகராறில் ஈடுபட்ட மாணவர்களை வரிசையாக நிற்கவைத்து ஆசரியர்கள் பிரம்பால்
அடித்துள்ளனர். அடிபட்ட மாணவர்கள் காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம்: 2
சென்னை திருவெற்றியூரில் காலை பிரேயரின்போது நகம்வெட்டிக்கொண்டிருந்த
மாணவனைக் கண்டித்த ஆசிரியரை அந்த மாணவன் தாக்கியுள்ளான்.

நான் படித்தகாலத்தில் படிக்காத முரட்டு பிள்ளைகளை பள்ளியில் கொண்டு
விடும் பெற்றோர் "வாத்தியாரய்யா எம்மவன் ஒழுங்கா படிக்கலைனா
அடிச்சு தோலை உறிச்சுருங்க" என்று சொல்லி விட்டுச்செல்வர்.
எனது கணக்கு வாத்தியார் (பெயர் நடராஜ் என்று ஞாபகம்) கணக்கை
தவறாகப்போட்டால் பிரம்பால் பிருஸ்டத்தில் அடிப்பார். (அவரது வகுப்பு
இருக்கும் நாட்களில் அடிதாங்குவதற்காக ஒன்றின்மேல் ஒன்றாக இரண்டு
டவுசர்கள் அணிந்து செல்வோம் என்பது தனிக்கதை) ஆனால் ஒருநாளும்
ஆசியர் அடித்ததாக பெற்றோரிடம் புகார் செய்ததில்லை.புகார் செய்தால்
ஏன் படிக்கவில்லை என்று வீட்டிலும் அடிவிழும்.
அந்தக்காலத்தில் ஆசிரியர்கள் மீது ஒரு பயம்கலந்த மரியாதை இருந்தது.
இன்று ஆசிரியர் அடித்தால் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம்,
ஆசிரியர் கைதுசெய்யப்படலாம் என்ற நிலைமை உள்ளது.
இதன் விளைவு ஆசிரியர் மீது பயமோ, மரியாதையோ இருக்காது.
ஆசிரியரும் கடமைக்கு கரும்பலகையில் எழுதிப்போட்டுவிட்டுச்
செல்வாரேயானல் நமது வருங்கால சந்ததியின் எதிர்காலம் என்னாகும்?
கண்டித்த ஆசிரியரையே ஒருமாணவன் திருப்பித்தாக்குகிறான் என்றால்
அவனுக்கு அந்த தைரியம் எங்கிருந்து வந்தது?
நாங்கள் தவறு செய்வோம் ஆனால் எங்களை யாரும் கண்டிக்கவோ,
தணடிக்கவோ கூடாது என்றால் யார் இவர்களைத்திருத்துவது?

எச்சரிக்கை:
நாம் ஒரு பொறுப்பற்ற பொறுக்கிகள் நிறைந்த சமூகத்தை உருவாக்கிக்
கொண்டிருக்கின்றோம்.இதன் பின்விளைவுகள் மிகமோசமாக இருக்கும்.

Saturday, December 01, 2007

வீட்டில்....? யாருமில்லை.

அது ஒரு மழைநாள் இரவு.
ஆளரவமற்ற தெரு
மெலிதான தூரலில்
நனைந்த கோழியாய்
நான் நடக்கின்றேன்.

மழை வலுத்தது குளிர் வாட்டியது
உன் இல்லம் என்பதறியாமல்
ஒதுங்கினேன்.

ஜன்னல் வழியே கசிகின்றது
மல்லிகை வாசம்.

திரும்பிப் பார்த்தேன்
ஒளிரும் நிலவாய்
உன் முகம்.

"யாரது?"
அதிகார வார்தையை
அன்பாய் பிரயோகித்தாய்.

"கனமான மழை
அதனால் ஒதுங்கினேன்"

"ஏன் நனைகிறீர்கள்
உள்ளே வாருங்கள்"

கதவு திறந்தாய்
ஒற்றை மெழுகுவர்த்தியின்
ஒளியில் உன் வடிவம் கண்டேண்.
என் தொண்டைக்குழியில்
எதுவோ அடைத்தது.

"வீட்டில்.....?"

"யாருமில்லை"

தயங்கினேன்

"பரவாயில்லை வாருங்கள்"

உள்ளே வந்தேன்.

"அமருங்கள்"

எதையோ எடுக்க உள்ளே சென்றாய்
காற்றின் வேகத்தில்
கதவு தானாய் மூடிக்கொண்டது.
எனக்குள்
எதுவோ திறந்து கொண்டது.

எரிந்த மெழுகு வர்த்தியும்
அணைந்த சில நொடிகளில்
என்காதருகே உன் மூச்சுக்காற்றின்
வெப்பம் உணர்ந்தேன்.

நம் இருவருக்குள்ளும்
பற்றிக்கொண்டது நெருப்பு.
நான் என் நினைவிழந்தேன்.

விடியலில் நான் விழித்தபோது
என் வீட்டிலிருந்தேன்.

நேற்றிரவு நடந்தது
நிஜமா? கனவா?
குழம்பிப்போனேன்.

உன் வீட்டைத்தேடி ஓடி வந்தேன்
பூட்டுத் தொங்கியது.

அருகிலிருந்தவரிடம் கேட்டேன்.

"இங்கே இருந்தவர்கள்?"

"தம்பி ஊருக்குப்புதுசா?"

"ஆம்"

"இங்கே இருந்த இளம்பெண்
ஏனோ தெரியவில்லை
மூன்று மாதம் முன்பு
துக்கில் தொங்கி விட்டாள்
பாவம்" என்றார்.

வீட்டில்....? யாருமில்லை.

அது ஒரு மழைநாள் இரவு.
ஆளரவமற்ற தெரு
மெலிதான தூரலில்
நனைந்த கோழியாய்
நான் நடக்கின்றேன்.

மழை வலுத்தது குளிர் வாட்டியது
உன் இல்லம் என்பதறியாமல்
ஒதுங்கினேன்.

ஜன்னல் வழியே கசிகின்றது
மல்லிகை வாசம்.

திரும்பிப் பார்த்தேன்
ஒளிரும் நிலவாய்
உன் முகம்.

"யாரது?"
அதிகார வார்தையை
அன்பாய் பிரயோகித்தாய்.

"கனமான மழை
அதனால் ஒதுங்கினேன்"

"ஏன் நனைகிறீர்கள்
உள்ளே வாருங்கள்"

கதவு திறந்தாய்
ஒற்றை மெழுகுவர்த்தியின்
ஒளியில் உன் வடிவம் கண்டேண்.
என் தொண்டைக்குழியில்
எதுவோ அடைத்தது.

"வீட்டில்.....?"

"யாருமில்லை"

தயங்கினேன்

"பரவாயில்லை வாருங்கள்"

உள்ளே வந்தேன்.

"அமருங்கள்"

எதையோ எடுக்க உள்ளே சென்றாய்
காற்றின் வேகத்தில்
கதவு தானாய் மூடிக்கொண்டது.
எனக்குள்
எதுவோ திறந்து கொண்டது.

எரிந்த மெழுகு வர்த்தியும்
அணைந்த சில நொடிகளில்
என்காதருகே உன் மூச்சுக்காற்றின்
வெப்பம் உணர்ந்தேன்.

நம் இருவருக்குள்ளும்
பற்றிக்கொண்டது நெருப்பு.
நான் என் நினைவிழந்தேன்.

விடியலில் நான் விழித்தபோது
என் வீட்டிலிருந்தேன்.

நேற்றிரவு நடந்தது
நிஜமா? கனவா?
குழம்பிப்போனேன்.

உன் வீட்டைத்தேடி ஓடி வந்தேன்
பூட்டுத் தொங்கியது.

அருகிலிருந்தவரிடம் கேட்டேன்.

"இங்கே இருந்தவர்கள்?"

"தம்பி ஊருக்குப்புதுசா?"

"ஆம்"

"இங்கே இருந்த இளம்பெண்
ஏனோ தெரியவில்லை
மூன்று மாதம் முன்பு
துக்கில் தொங்கி விட்டாள்
பாவம்" என்றார்.

Thursday, November 29, 2007

ஒரு சென்னை வாசியின் புலம்பல்.

சென்னையின் மிகப்பெரிய பிரச்சனை போக்குவரத்து நெரிசல்.
கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள் எப்போது முடிவடைந்து
எப்போது திறப்பு விழாகண்டு இந்தப்பிரச்சனை தீரும் என்று
தெரியவில்லை.
எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல நெடுஞசாலைத்
துறையும், சென்னை மாநகராட்சியும் செய்யும் தொல்லை
தாங்க முடியவில்லை. சாலையோரம் சேரும் மண்ணை
அகற்றுகிறோம் என்று சொல்லி சாலையின் பாதியை
அடைத்துக் கொள்கிறார்கள். சாலையை சுத்தப்படுத்துவது
நல்ல விசயம்தானே இதற்க்குப் போய் ஏன் அலுத்துக்கொள்கிறாய்
என்கிறீர்களா?. ஆனால் அதற்கும் நேரம் காலம் இருக்கிறதல்லவா?

போக்குவரத்துக் குறைவாக இருக்கும் மதிய நேரம் அல்லது இரவில் சுத்தப்படுத்தலாமே?
அல்லது விடுமுறை நாட்களில் சுத்தப்படுத்தலாம். ஆனால் இவர்கள் செய்வதென்ன?

வடபழனி 100 அடி சாலை சாதரணமாகவே காலையில் போக்குவரத்து
நெரிசலில் பிதுங்கும். அதிலும் முகூர்த்த நாளன்று கேட்கவே வேண்டாம்.
ஆனால் சொல்லி வைத்தார்போல் முகூர்த்த நாளன்று காலையில்தான்
பாதி சாலையை அடைத்துக் கொண்டு கருமமே கண்ணாக வேலை செய்கிறார்கள்.
அது போன்ற நாட்களில் கோயம்பேட்டிலிருந்து கிண்டி செல்வதற்கு 1 மணி
நேரத்திற்கு மேலாகிறது.
உத்தரவிடும் உயர்ந்த பதவியிலிருப்பவர்களுக்கு மூளையே கிடையாதா?
அல்லது யோசிக்கவே மாட்டார்களா?

Tuesday, November 27, 2007

பாம்பாட்டிக்கு பாம்பால் சாவு - மூன்றாவது கோணம்.

தான் செய்ய அச்சப்படும் எதையாவது மற்றவர்கள் செய்தால் அவர்களுக்கு அதனாலேயே அழிவு என்று சொல்லி வக்கிரமாகச் சந்தோசப்படுவது மனித இயல்பு.
இதுவும் அப்படி அதீத அச்சத்தால் சொல்லப்பட்டதுதான். பாம்பைக்கண்டு பயந்தவர்கள்தாம் அதிகமாக பாம்புகளால் மரணமடைகின்றனர், பாம்பாட்டிகள் அல்ல.
யானையும் பாகனுக்குக் குறி வைப்பதில்லை. மதம் பிடித்துக் கூட்டத்தை நோக்கி ஓடும் யானையை அடக்க வேண்டும் என்ற பொறுப்பு உணர்வோடு தங்கள் உயிரையே பணயம் வைத்துச் செயல்படும் பல பாகர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஓரிருவர் உயிரிழக்கக்கூடும்.
பாம்பு, யானை இருக்கட்டும்.... உங்கள் வாகனத்தைச் சரியாகக் கையாளத் தெரியாமல் ஓட்டிச் சென்றால், அதுகூட ஆபத்துதான்.எதையுமே முழுமையாகப் புரிந்துகொண்டு கையாண்டால் பாம்பு, புலி, யானை, வாகனம், வாழ்க்கை எதுவுமே ஆபத்தல்ல.
-ஆனந்த விகடனில் சத்குரு ஜக்கி வாசுதேவ்.

Sunday, November 25, 2007

நிலவில் தெரிந்த சாய்பாபா?


இஸ்ரோ தலைவர், இந்தியா விரைவில் நிலவுக்கு விண்கலம் அனுப்ப இருப்பதாக அறிவித்த நாளில், நிலவில் சாய்பாபா உருவம் தெரிவதாக சென்னையில் ஒரு வதந்தி பரபரப்பாக உலாவந்தது. நானும் மொட்டை மாடிக்குப்போய் ஆர்வமாக பார்த்தேன். எனக்கு பாட்டி வடைசுட்டதுதான் தெரிந்தது. என் மனைவியை அழைத்துக் காட்டினேன். அவளுக்கு ஷிரிடி சாய்பாபா தெரிவதாகச் சொன்னாள். என் சகோதரி பார்த்து விட்டு புட்டபர்த்தி சாய்பாபா தெரிவதாகச் சொன்னார். என்னடா இது என்று மீண்டும் நான் வேறு கோணத்தில் பார்த்தேன் அப்போது எனக்கு தலைப்பாகை இல்லாத விவேகானந்தர் முகம் போலத்தெரிந்தது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் என் மகளை அழைத்துக் காட்டினேன் "டாடி எனக்கு பாட்டி வடை சுடறதுதான் தெரியுது. ஆனா காக்காயத்தான் காணோம்" என்றாள்.
ஆக நிலாவின் மேடு பள்ளங்களால் ஏற்படும் நிழல் அவரவர் கற்பனைக்கு ஏற்றார் போல் உருவங்களாய் தோன்றுகிறது. (எப்படி என் கண்டுபிடிப்பு?). நேற்றும் பவுர்ணமி நிலவைப் பார்த்தேன். என் மனைவியை அழைத்து உன் முகம் தெரிகிறது பார் என்றேன்.அடிக்க வந்தாள். நண்பர்களே நீங்களும் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் உங்களுக்கு என்ன உருவம் தெரிகிறதென்று.

Friday, November 16, 2007

ரத்தக் கண்ணீர்

வலைப் பதிவில் முதல்முறையாய் கதை சொல்லப்போறேன்! எல்லாரும் ஒரு முறை ஜோரா கைதட்டுங்க பார்க்கலாம்.
சிரிக்காதீங்க, இது சிரிப்புக் கதை இல்லீங்க. சீரியஸ் சோகக் கதை. அதனால எல்லாரும் கிளிசரினோ இல்ல சின்ன வெங்காயமோ
கைல வச்சுக்கங்க. பின்ன கண்ல தண்ணி வரணும்ல.

எச்சரிக்கை:

1.பகலெல்லாம் கண்முழிச்சு தமிழ் சீரியல் பார்த்து அழுது தீர்த்த தாய்மார்கள் இதைப் பார்க்க வேண்டாம்.

2.காதலன் அல்லது காதலி சாயங்காலம் 5 மணிக்கு பீச்சுக்கு வர்ரேனு சொல்லிட்டு அல்வா கொடுத்ததால தனியா சுண்டல்
வாங்கித் தின்று கடுப்பான காதலர்கள் அல்லது காதலிகள் இதைப் படிக்க வேண்டாம்.

3.அறிவாலயத்திலிருந்து போயஸ்கார்டனுக்கு ரூ.150 ரேட் பேசி ஆட்டோ ஏறி கார்டனில் இறங்கியதும் ரூ.300 கேட்டு
அடாவடி செய்த ஆட்டோ டிரைவரிடம் தோத்துப் போய் தண்டம் அழுத திருவாளர்கள் இதைப்படிக்க வேண்டாம்.

4.ஆட்டோதான் அடாவடி நான் டூவீலராக்கும் என்று வீராப்புப் பேசி டூவீலரில் சென்று கிண்டி கத்திப்பாரா சந்திப்பில்
VIP ( வேலை வெட்டி இல்லா பெர்சன் ) வருகைக்காய் நிறுத்தப்பட்ட போக்குவரத்தில் மணிக்கணக்கில் சிக்கிச்சீரழிந்து தாமதமாய்
அலுவலகம் போய் மேலதிகாரியிடம் வாங்கிக்கட்டிக் கொண்டவர்கள் இதைப்படிக்க வேண்டாம்.

5.தீபாவளி ரிலீஸ் அழுகிய தமிழ்ப் படங்களை A.C தியேட்டரில் வேர்க்க விறுவிறுக்க படம் பார்த்து நொந்து நூலானவர்கள்
இதைப்படிக்க வேண்டாம்.

"வேண்டாம்.....வேண்டாம்னு ஆத்திச்சூடி மாதிரி சொல்லிக்கிட்டே போற. வேற யார்தான்யா படிக்கறது."

"அவசரப்படாதீங்க. இவ்வளவு தூரம் படிச்சுட்டீங்க பொறுமையா இன்னும் கொஞ்சம் படிங்க."

"அதுசரி கதைய எப்ப ஆரம்பிப்ப?"

"இப்பத்தான அவசரப்படாதீங்கன்னு சொன்னேன். கதைல ஒரு கனவு song வருது, ஹீரோ ஹீரோயின் சந்திரமண்டலத்துல ஒரு டூயட்டுக்கு
ஆடராங்க அதுக்கு எப்படி செட் போடலாம்னு டிஸ்க்கஸ் பண்ண சங்கரை வரச்சொல்லீருக்கறேன். அதுபோக பாலா, மணிரத்னம், ஹரி, முருகதாஸ்னு
பெரிய பட்டளமே வருது.விவாதம் முடிச்சு எப்படியும் பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணிடுவேன். என்ன கண்ணுல ரத்தம் வருதா? அதாங்க "ரத்தக் கண்ணீர்"
நானும் நல்லா மொக்கை போடரேன்ல? ஐயோ யாரோ அடிக்க வாராங்க. எஸ்கேப்..........."

Wednesday, November 14, 2007

பாமரன்கேள்விகள்?

அஹிம்சாவாதி அண்ணல் காந்தியடிகள் ஆரம்பித்த காங்கிரஸ் இன்று கொலைகாரர்களின் கூடாரமாகிப்போனதே அதைத் தடுக்கவோ தட்டிக்கேட்கவோ திராணியில்லாத இளங்கோவனுக்கு, தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு இரங்கல்பா எழுதிய கலைஞரை தட்டிக்கேட்க என்ன அருகதை இருக்கிறது?

Tuesday, November 13, 2007

பத்து நிமிடத்தில் கவிதை எழுத கற்றுக்கொள்ளுங்கள்

பத்து நிமிடத்தில் கவிதை எழுத கற்றுக்கொள்ளுங்கள்.
மிக எளிய பயிற்சி. செய்முறை விளக்கமும் உண்டு.
பெண்களுக்கு பெண்களால் கற்றுத்தரப்படும்.
மிகக் குறைந்த கட்டணம். கவிதை பத்து நிமிடத்தில் வரவில்லை எனில் காசு திரும்ப தரப்படும். இந்த விளம்பரத்தை மின் அஞ்சல் செய்பவர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி உண்டு.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ரசிகன்

எம்மிடம் பயிற்சி பெற்ற சிலரின் கருத்துக்கள்
"என்னால நம்பவே முடியல. பத்து நிமிடத்தில் கத்துக்குடுத்துட்டாங்க. அங்க கத்துக்கிட்டு நான் எழுதுனதுதான் ராமாயணம்".
-கம்பர்

"எனக்கு ஹைக்கூ எழுத கத்துக்குடுத்தாங்க. பத்தே நிமிடம்தான்.1330 ஹைக்கூ எழுதி திருக்குறள்னு புக்கே போட்டுட்டேன்னா பார்த்துக்குங்க.
- திருவள்ளுவர்


Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads